ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் 6 வெவ்வேறு இடங்களில் தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதல்களில் குறைந்தது 3 போ் இதுவரை பலியாகியுள்ளதுடன், 15-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
பதில் தாக்குதலில் தீவிரவாதக் குழுவைச் சேர்ந்த ஒருவரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற தாக்குதல்களில் காயமடைந்த சிலர் ஆபத்தான கட்டத்தில் உள்ளதால் இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தை வெறுப்பூட்டும் தீவிரவாத தாக்குதல் என ஆஸ்திரிய அரச தலைவர் செபாஸ்டியன் குர்ஸ் விமர்சித்துள்ளார்.
தீவிரவாதத் தாக்குதலை அடுத்து வியன்னா நகரில் பெரும்பாலான பகுதிகள் மூடக்கப்பட்டு தீவிரவாதிகளைத் தேடிக் கண்டறியும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.
பொது மக்கள் பாதுகாப்பாக வீடுகளுக்கும் இருக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேடுதல்கள் தொடர்ந்து வருவதால் வியன்னாவில் தொடர்ந்து பரபரப்பும் பதற்றமும் நீடித்து வருகிறது.
இந்தத் தீவிரவாத தாக்குதலை உடனடியாக உலக நாடுகளின் பல்வேறு தலைவர்களும் கடுமையாகக் கண்டித்துள்ளனர்.
Category: உலகம், புதிது
Tags: ஆஸ்திரேலியா